

சென்னை,
நடிகை ஷாலினி பாண்டேவின் பெயரை மற்றும் தோற்றத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி ஏஐ வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவுக்கு நடிகை ஷாலினி பாண்டே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலினி பாண்டே. தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வரும் அவர் சமீபத்தில் வெளியான தனுஷின் இட்லி கடை படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், நடிகை ஷாலினி பாண்டேவின் பெயர் மற்றும் தோற்றத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி ஏஐ வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவுக்கு நடிகை ஷாலினி பாண்டே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அந்த வீடியோவில் தனது உருவம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக ஷாலினி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவர், “தொழில்நுட்பம் இவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுவதைப் பார்ப்பது மிகவும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருக்கிறது, இதுபோன்ற துஷ்பிரயோகத்தை தான் கடுமையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெண்களை குறிவைத்து போலியான மற்றும் ஆபாசமான வீடியோக்களை ஏஐ மூலம் உருவாக்கி பரப்புவது அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. இதுபோன்ற வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது அல்லது மற்றவர்களுக்கு பகிர்வது போன்ற செயல்களில் ஈடுபடாமல், அவற்றை சமூக வலைதளங்களில் ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே பல திரை பிரபலங்கள் ஏஐ மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில், ஷாலினி பாண்டேவின் இந்த எதிர்ப்பும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.