

சென்னை,
நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய் கடைசியாக நடித்துள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'. இந்த திரைப்படத்தில் ராணுவம் சார்ந்த காட்சிகள், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கவில்லை. இந்த படத்தை மறுஆய்வு கமிட்டிக்கு பரிந்துரை செய்தது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 'ஜனநாயகன்' படத்தை தயாரித்த நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தணிக்கை சான்றிதழை உடனே வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தனி நீதிபதி உத்தரவை ரத்துசெய்தது. மீண்டும் வழக்கை விசாரிக்கும்படி உத்தரவிட்டது.
இதன்படி தனி நீதிபதி முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை தயாரிப்பு நிறுவனம் திரும்ப பெற்றது. 'ஜனநாயகன்' படம் தணிக்கை வாரியத்தின் மறுஆய்வு குழுவின் பரிசீலனையில் இருந்தது. இந்த சூழலில், 'ஜனநாயகன்' திரைப்படம் அண்மையில் இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியானது. இதற்கு திரையுலகை சேர்ந்த பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே, ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்தது தொடர்பாக படக்குழு அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, கடந்த 11-ந்தேதி 6 பேரை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியை சைபர் கிரைம் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
இதன்படி, படத்தொகுப்பு பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த ஒப்பந்த ஊழியர்(Freelancer) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அது மட்டுமின்றி மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒப்பந்த முறையில் பணியாற்றிய தற்காலிக விஷுவல் எடிட்டர், எடிட்டிங் ரூமில் இருந்து படத்தின் ரீல்களை அனுமதியின்றி எடுத்துள்ளார் என்றும், திருடப்பட்ட ரீல்களை திரைப்படமாக மாற்றி, அதனை மற்றவர்களுக்கு பகிர்ந்து இணையதளத்தில் கசியவிட்டுள்ளார் என்றும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.