'ஜனநாயகன்' சிறப்பு காட்சி ரத்து... ரசிகர்கள் அதிர்ச்சி

புதுச்சேரியில் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் சிறப்புக் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'ஜனநாயகன்' சிறப்பு காட்சி ரத்து... ரசிகர்கள் அதிர்ச்சி
Published on

புதுச்சேரி,

தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தணிக்கை தொடர்பான பிரச்சினைகளைத் தாண்டி, 'ஜனநாயகன்' திரைப்படம் வருகிற 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய்யின் இறுதிப் படம் எனக் கூறப்படுவதால், உலகளவில் 3,500-க்கும் மேற்பட்ட திரைகளில் படம் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாரிப்பு

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, விஜய் ரசிகர்களும், தமிழக வெற்றி கழக (த.வெ.க.) தொண்டர்களும் திரையரங்குகளில் சிறப்பான கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர். பல இடங்களில் பேனர்கள், கட்-அவுட்கள் உள்ளிட்ட பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் சிறப்பு காட்சி ரத்து

இந்த நிலையில், புதுச்சேரியில் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் காலை 7 மணி சிறப்புக் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் மொத்தம் 13 திரையரங்குகளில் 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியாக உள்ளது. இதில் 3 திரையரங்குகளுக்கு மட்டும் சிறப்புக் காட்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், பொதுமக்களுக்கு போதுமான அளவில் டிக்கெட் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டதால், சிறப்புக் காட்சியை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காலை 10 மணிக்கே முதல் காட்சி திரையிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com