'ஜனநாயகன்' படம் வெற்றிகரமாக வெளிவரும் - நடிகர் ஜீவா பேட்டி


ஜனநாயகன் படம் வெற்றிகரமாக வெளிவரும் - நடிகர் ஜீவா பேட்டி
x

ஜனநாயகன் திரைப்படம் விஜய்யின் கடைசி படமாக இருக்கக் கூடாது என்று ஜீவா கூறியுள்ளார்.

நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குனர் நித்திஷ் சகாதேவ் இயக்கத்தில் "தலைவர் தம்பி தலைமையில்" என்ற திரைப்படம் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தூத்துக்குடியில் உள்ள கிளியோபட்ரா திரையரங்கில் ஓடிய இந்த படத்தை காண்பதற்காக நடிகர் ஜீவா மற்றும் இயக்குனர் நித்திஷ் சகாதேவ் ஆகியோர் வந்தனர்.

திரையரங்கு நிர்வாகம் சார்பில் நடிகர் ஜீவா மற்றும் இயக்குனர் ஆகியோருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரசிகர்களிடம் படம் குறித்த கருத்துகளை கேட்டனர். பின்னர் நடிகர் ஜீவா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் ஜனவரி 30-ந்தேதி தான் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் தற்போது அண்ணனின் (நடிகர் விஜய்) ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாத நிலையில் தம்பி படம் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த திரைப்படத்தை மலையாள பட இயக்குனர் நித்திஷ் சகாதேவ் இயக்கி உள்ளார்.

தற்போது சென்சார் போர்டு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கின்றது. எனக்கு ஜிப்ஸி படம் வரும்போது 40-க்கும் மேற்பட்ட இடங்களில் கட் செய்யப்பட்டது. பல்வேறு வசனங்கள் கருப்பு மற்றும் வெள்ளை காட்சிகளாக வைக்கப்பட்டன. இந்த படத்திற்கும் சிறிய பிரச்சினை வந்தது. பின்னர் சரியாகிவிட்டது.

ஜனநாயகன் திரைப்படம் சென்சார் போர்டு பிரச்சினை முடிந்து வெற்றிகரமாக வெளி வரும். ஜனநாயகன் திரைப்படம் நடிகர் விஜய்யின் கடைசி படமாக இருக்கக் கூடாது என்பது எனது விருப்பம். நடிகர் விஜய்யின் படங்கள் அனைத்துமே வசூலை குவிக்கும். தியேட்டர்களுக்கு, தயாரிப்பாளர்களுக்கு வெற்றியை கொடுக்கும். அதே போன்று இந்த ஜனநாயகன் திரைப்படமும் வெற்றி பெறும் என்பது எனது கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story