

ஜேசன் விஜய்யின் 29-வது பிறந்த நாளை முன்னிட்டு சோசியல் மீடியாவில் வாழ்த்துகள் குவிகின்றன.
முதல்-அமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக ‘சிக்மா’ படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். மேலும் இந்தப் படத்தில் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.
ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள டொராண்டோ பிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பு டிப்ளமோ படித்துள்ளார். தொடர்ந்து லண்டனில் திரைக்கதை எழுதுவது தொடர்பான பி.ஏ. ஹானர்ஸ் படித்துள்ளார். சில குறும்படங்களை இயக்கியுள்ளார்.
முதல்-அமைச்சர் விஜய்யின் திரையுலகப் பயணத்தின் இறுதிப் படமாக அமைந்திருக்கிறது ‘ஜனநாயகன்’. பல ஆண்டுகளாக ரசிகர்களின் இதயத்தில் தளபதியாக வலம் வந்த விஜய் தனது திரைப்பயணத்திற்கு விடை கொடுக்கும் இந்த படம் ரசிகர்களுக்கு மிகவும் உணர்ச்சிகரமான ஒன்றாக மாறியுள்ளது. விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் மூலம் ஜேசன் சஞ்சய், இயக்குநராக தனது முதல் அடியை எடுத்து வைக்கிறார். விஜய் தனது திரைப்பயணத்தை முடிக்கும் நேரத்தில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக தனது பயணத்தை தொடங்குகிறார்.
விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ கடந்த ஜூலை 23-ந் தேதி வெளியான நிலையில் ‘சிக்மா’ வெளியீடு தள்ளிப் போயுள்ளது. எப்போது ரிலீஸாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஜனநாயகன்’ படத்தின் இயக்குநர் எச்.வினோத் கொடுத்துள்ள ஒரு பேட்டியில் ஜேசன் சஞ்சய் குறித்து பேசுகையில் “நான் சமீபத்துல ஜேசன் சஞ்சயை மீட் பண்ணி பேசுனேன். நிறைய உதவி இயக்குநர்கள் கைல கதையோட சுத்திட்டு இருக்காங்க, நீங்க நடிங்கன்னு சொன்னேன். ஏன்னா டைரக்ட் பண்றதுக்கு இங்க நிறைய பேர் இருக்காங்க. உங்களுக்கும் விருப்பம் இருக்கும். ஆனா, நடிச்சுட்டும், டைரக்ட் பண்ணலாம்ன்னு சொன்னேன்” என்று கூறியுள்ளார்.
த.வெ.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டநிலையில், சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மகன் ஜேசனும், மகள் திவ்யா சாஷாவும் தாயின் பக்கம்தான் நிற்கிறார்களாம். கடந்த சில வருடங்களாகவே அவர்கள் விஜய்யோடு பேசுவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. முதல்-அமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் ஆஜராகாததால், வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜேசன் சஞ்சய் பிறந்த நாளை முன்னிட்டு, ‘சிக்மா’ படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.
‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் விஜய்யின் 29-வது பிறந்த நாளை முன்னிட்டு சோசியல் மீடியாவில் வாழ்த்துகள் குவிகின்றன.