

மும்பையில் சில தினங்களுக்கு முன்பு நடந்த விருது வழங்கும் விழாவில் திரை உலக பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். பல வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசனும், நடிகை ரேகாவும் விழாவில் சந்தித்தனர். விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘ஜெமினிகணேசனிடம் இருந்து தான் ‘டை’ கட்ட கற்றுக் கொண்டேன்’ என கூறியதும் ரேகாவின் கண்கள் கண்ணீரால் நிரம்பியது. தொடர்ந்து கமல் பேசும் போது, ‘நான் ரேகாவிடம் ஒரே ஒரு கோரிக்கை விடுக்கிறேன். அதற்கு நீங்கள் அனுமதி தர வேண்டும்.
நான் உங்களை அன்போடு ‘அபு’ என அழைக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும். என் வாழ்வில் 3 நபர்களை தான் இந்த பெயரில் அழைப்பேன். ஒருவர் என் தந்தை, 2-வது என் குழந்தை பருவ செல்லப் பெயர், 3-வதாக நான் என் மகள் சுருதியை அழைக்கும் பெயர். அதனால் நான் என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவராக கருதுகிறேன். இந்த விருதை உங்களுக்கு வழங்கிய போது எனக்கு உங்கள் தந்தை நினைவுக்கு வந்தார். எனக்கு வார்த்தைகளே வரவில்லை. நான் கற்பனை செய்ததை விட இந்த கலையில் நீங்கள் சாதித்துள்ளீர்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து ரேகா பேசியதாவது:- நான் இதற்காக 50 ஆண்டுகளாக காத்திருந்தேன். கமல்ஜி என்னைப் பற்றி நீங்கள் கூறிய அழகான வார்த்தைகளுக்கு நன்றி. ஒரு நடிகராக கமல்ஜியை பற்றி நான் என்ன சொல்வது? அவர் ஒரு சகலகலா வல்லவன். அவருக்கு மொழி எல்லைகளே கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.