

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜா கருப்பசாமியை நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் அனிஷ்மா கதாநாயகியாக நடித்துள்ளார். ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் திரைப்படம் இதுவாகும். ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். ‘மொத ராத்திரி’ படம் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
புதிதாகத் திருமணமான ஒரு ஜோடியின் வாழ்க்கையில் நடைபெறும் காதல் மற்றும் நகைச்சுவை சம்பவங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ‘மொத ராத்திரி’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பைப் பெற்றன.
ரூ 5 கோடி பட்ஜெட்டில் வெளியான ‘மொத ராத்திரி’ படம் 2 வாரத்தில் ரூ.8 கோடி வசூலித்துள்ளது.
இந்த நிலையில், இயக்குநர் ராஜா கருப்பசாமியை நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் இன்று நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
இதுபற்றி, இயக்குநர் ராஜா கருப்பசாமி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “என் வாழ்க்கையில் ஒரு நாளும் உங்கள் சினிமாவைக் குறித்து பேசாமலோ, உங்களின் படங்களைப் பார்க்காமலோ, உங்கள் கதாபாத்திரங்களைப் பற்றி விவாதம் செய்யாமலோ இருந்ததில்லை. ஒரு நடிகரால் எப்படி ஒரு கதாபாத்திரத்திற்குள் முழுமையாக ஒன்றிவிட முடியும் என்பதையும், ஒரு படைப்பாளி எப்படி சமூகத்தைக் கேள்விக்குள்ளாக்க முடியும் என்பதையும் உங்களின் படங்கள் எனக்குக் கற்றுக்கொடுத்தன என்றும் உங்கள் ரசிகன்” என கூறியுள்ளார்.
‘மொத ராத்திரி’ படம் வரும் செப்டம்பர்18 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.