

நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘கல்கி ஏடி 2898’ திரைப்படம் உலகமெங்கும் ரூ.1100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. மகாபாரதம், ஏஐ தொழில்நுட்பம், கல்கி அவதாரம் என புராணக் கதைகளுடன் எதிர்காலத்தை கற்பனை செய்து உருவான இப்படம் தொழில்நுட்ப ரீதியாக பாராட்டுகளை பெற்றது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
‘கல்கி 2’ படப்பிடிப்பில் கலந்துகொள்ள தீபிகா படுகோன் பல நிபந்தனைகளை விதித்ததால் அவரைத் தயாரிப்பு நிறுவனம் படத்திலிருந்து நீக்கியது. தீபிகா படுகோன் நடித்துவந்த கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவியை நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ‘கல்கி 2’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாகவும் இதில் நடிகர்கள் அமிதாப் பச்சனுக்கும் கமல்ஹாசனுக்கும் இடையேயான காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பாகத்தில் கமல்ஹாசனின் யாஸ்கின் என்ற வில்லன் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இப்படம் 2028ம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.