'சந்திரமுகி' படத்தில் ஜோதிகா நடித்த மாதிரி என்னால் நடிக்க முடியாது - கங்கனா ரணாவத்

'சந்திரமுகி' படத்தில் ஜோதிகா நடித்த மாதிரி என்னால் நடிக்க முடியாது என்று கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
'சந்திரமுகி' படத்தில் ஜோதிகா நடித்த மாதிரி என்னால் நடிக்க முடியாது - கங்கனா ரணாவத்
Published on

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடித்து 2005-ல் வெளியான 'சந்திரமுகி' பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதில் பிரபு, வடிவேலு, நாசர் ஆகியோரும் நடித்து இருந்தனர். வித்தியாசமான அமானுஷ்ய படமாக தயாராகி இருந்தது. 'சந்திரமுகி' படத்தில் ஜோதிகாவின் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. குறிப்பாக 'ரா ரா' என்ற பாடலில் சந்திரமுகியாக மாறி ஜோதிகா ஆடும் நடனம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

தற்போது 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகம் பி.வாசு இயக்கத்தில் தயாராகி வருகிறது. இதில் ஜோதிகாவுக்கு பதில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். ராகவா லாரன்ஸ் நாயகனாக வருகிறார். 'சந்திரமுகி-2' படத்தில் ஜோதிகாவுக்கு இணையாக கங்கனா நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில் 2019-ல் ஜோதிகா பேசிய வீடியோ ஒன்றை கங்கனா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஜோதிகாவிடம் இந்தியில் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்று கேட்க அதற்கு அவர் கங்கனா ரணாவத் என்று பதில் அளித்து இருப்பார். இந்த வீடியோவை மேற்கோள் காட்டி கங்கனா வெளியிட்டுள்ள பதிவில், "ஜோதிகா இப்படி சொல்லி இருப்பது எனக்கு ஊக்கமளிக்கிறது.

'சந்தரமுகி' படத்தில் ஜோதிகா வெளிப்படுத்திய சிறந்த நடிப்பை இப்போது தினமும் நான் பார்த்து வருகிறேன். காரணம் 'சந்திரமுகி-2' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை தற்போது படமாக்கி வருகிறோம். 'சந்திரமுகி' முதல் பாகத்தில் ஜோதிகா வெளிப்படுத்திய நடிப்பு வியப்பை தருகிறது. அவர் நடிப்புக்கு இணையாக நடிப்பது என்பது சாத்தியமில்லாத விஷயம்'' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com