எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!

எமர்ஜென்சி படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்காத மத்திய தணிக்கை வாரியத்தை மும்பை உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.
எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!
Published on

மும்பை,

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'எமர்ஜென்சி'. இதில், இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். படத்தை அவரே இயக்கியும் உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். கடந்த ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், சில குறிப்பிட்ட காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

அதாவது, சீக்கிய சமூகத்தினரைத் தவறாக சித்தரித்துள்ளதாக எழுந்த சர்சையைத் தொடர்ந்து இப்படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இந்த காரணத்தினால் தான் இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகள் குறிப்பிட்ட சமூகத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் அதை நீக்கும்படியும் சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாலிவுட்டில் முக்கியமான நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். அனுராக் காஷ்யப்பின் 'கேங்ஸ்டர்' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான கங்கனாவுக்கு இதுவரை 4 முறை தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. எமர்ஜென்சி படத்தினை கங்கனா ரணாவத்தே இயக்கியுள்ளார். உடன் இணைத் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இந்தப் படத்தை தணிக்கை செய்யவிடாமல் மிரட்டுவதாக சமீபத்தில் கூறியிருந்தார்.

'இந்திரா காந்தியை கொலை செய்ததை, பிந்தர்வாலேவை காட்டக்கூடாது, பஞ்சாப் கலவரங்களை காட்டக்கூடாதென்றும் தான் மிகுந்த அழுத்தத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இவைகளைத் தவிர்த்துவிட்டு வேறு எதைக் காட்டுவதென எங்களுக்கு தெரியவில்லை. இதை என்னால் நம்பவே முடியவில்லை. இந்த நாட்டின் நிலைமை குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன்' என கங்கனா கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்தப் படத்தின் துணை தயாரிப்பு நிறுவனமான ஜீ என்டர்டெயின்மென்ட் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் சென்சார் போர்டுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, எமர்ஜென்சி படத்திற்கு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக செப்டம்பர் 25ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என சென்சார் போர்டுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீக்கியர்கள் குறித்து தவறாக காண்பிப்பதாக இந்தப் படத்தை வெளியடக்கூடாதென சிரோமனி அகாலிதளம் மத்திய தணிக்கை வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com