புதிய கூட்டணியை உருவாக்கும் கார்த்திக் சுப்புராஜ்... நாயகனாக அதர்வா!

கார்த்திக் சுப்புராஜின் புதிய திரைப்படத்தில் நடிகர் அதர்வா கதாநாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

புதிய கூட்டணியை உருவாக்கும் கார்த்திக் சுப்புராஜ்... நாயகனாக அதர்வா!
Published on

தென்னிந்திய திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ், 2012-ஆம் ஆண்டு வெளியான பீட்சா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனித்துவமான திரைக்கதை மற்றும் விறுவிறுப்பான காட்சியமைப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், தொடர்ந்து ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி, பேட்ட, மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், வசூலிலும் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்தது. இதனைத் தொடர்ந்து, தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் புதிய கதைகளைக் கொண்ட திரைப்படங்களை தயாரிப்பதிலும் கார்த்திக் சுப்புராஜ் கவனம் செலுத்தி வந்தார்.

இந்த நிலையில், மீண்டும் இயக்கத்தில் முழு கவனம் செலுத்தும் அவர், வணிக அம்சங்கள் நிறைந்த புதிய அதிரடி திரைப்படத்தை இயக்குவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடி கதாபாத்திரத்தில் அதர்வா

இந்தப் புதிய திரைப்படத்தில் நடிகர் அதர்வா கதாநாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இல்லாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவர் தோன்றவுள்ளதாகவும், அதற்காக தீவிரமான உடற்பயிற்சி, நடனப் பயிற்சி மற்றும் சண்டைப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய கதாபாத்திரத்தில் உபேந்திரா, பிரபுதேவா

மேலும், கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான உபேந்திரா இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், அவரது கதாபாத்திரம் கதையின் திருப்புமுனையாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, நடிகர், நடன இயக்குநர் மற்றும் இயக்குநரான பிரபுதேவா, அதர்வாவின் தந்தையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டணி ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் நாயகி, இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜின் தனித்துவமான திரைக்கதையுடன் அதர்வா, உபேந்திரா, பிரபுதேவா ஆகியோர் இணையும் இந்தப் படம், தமிழ் திரையுலகில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய படங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com