வாகனம் மோதி 'கருப்பி' நாய் சாவு: நடிகர் கதிர் இரங்கல்

பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த ‘கருப்பி’ நாய், வாகனம் மோதி உயிரிழந்தது.
வாகனம் மோதி 'கருப்பி' நாய் சாவு: நடிகர் கதிர் இரங்கல்
Published on

சென்னை,

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கிய முதல் திரைப்படமான பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த 'கருப்பி' என்ற நாயைச் சுற்றிலும் கதைக்களம் பயணித்து வரவேற்பை பெற்றது. மாரிசெல்வராஜ் தனது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே புளியங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலேயே பெரும்பாலான காட்சிகளை படமாக்கியிருந்தார்.

'கருப்பி' நாயை வளர்த்து வந்த புளியங்குளத்தைச் சேர்ந்த விஜயமுத்துவும் அந்த படத்தில் துணை நடிகராக நடித்து இருந்தார். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை தினத்தன்று புளியங்குளம் பகுதியில் பட்டாசு வெடித்ததால், 'கருப்பி' நாய் ஊரில் இருந்து நெல்லை-திருச்செந்தூர் மெயின் ரோடு பகுதிக்கு ஓடிச் சென்றது.

அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நாய் படுகாயமடைந்தது. அந்த வழியாக சென்றவர்கள் நாயை மீட்டு விஜயமுத்துவின் வீட்டுக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறிதுநேரத்தில் நாய் இறந்தது. இதையடுத்து 'கருப்பி' நாய்க்கு மாலை அணிவித்து அப்பகுதியில் புதைத்தனர்.

இந்த நிலையில், 'கருப்பி' நாய் உயிரிழந்ததற்கு நடிகர் கதிர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "கருப்பி நீ இல்லாத காட்டில் நான் எப்படி தான் திரிவேனோ... உனக்கு அமைதி கிடைத்துவிட்டது என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com