

சென்னை,
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 15-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘கருப்பு’ தற்போது பாக்ஸ் ஆபீஸில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக கொண்டு, அதனுடன் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாக்கப்பட்ட இப்படம், பல தடைகளை கடந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம் நடிகர் சூர்யாவிற்கு ஒரு வலுவான கம்பேக் படமாகவும் அமைந்துள்ளது.
இந்நிலையில், படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘கருப்பு’ திரைப்படம் மூன்று நாட்களில் உலகளவில் ரூ.120.75 கோடி வசூல் செய்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.78 கோடி வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.