

பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் நடிப்பில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் புயலைக் கிளப்பிய நகை நிறுவனத்தின் ரக்ஷா பந்தன் விளம்பரம், பொதுமக்களின் தீவிர எதிர்ப்பை அடுத்து திரும்பப் பெறப்பட்டுள்ளது.
பிரபல நகைக்கடை நிறுவனம், ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு கிருத்தி சனோன் நடித்த விளம்பரப் படத்தை வெளியிட்டது. அதில் கிருத்தி சனோன் அணிந்திருந்த ஆடை பண்டிகையின் கலாச்சாரத்திற்கு ஏற்ப இல்லை என்றும், உடலின் கழுத்துப்பகுதி மிகவும் திறந்த நிலையில் உள்ள ஆடையை அணிந்து கொண்டு ரக்ஷா பந்தன் கொண்டாடுவது போலக் காட்டப்பட்டதும் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
அந்த விளம்பரத்தில் அவர் தனது செல்லப் பிராணியான நாய்க்கு ராக்கி கட்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. பாரம்பரிய பண்டிகையையும் கலாச்சாரத்தையும் அவமதிக்கும் வகையில் இந்த விளம்பரம் இருப்பதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
நடிகை மற்றும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத், “சகோதரனுக்கு ராக்கி அணியும்போது இப்படிப்பட்ட உடையை அணிவார்களா?. பெண்களுக்குத் தங்களுக்குப் பிடித்தமான ஆடைகளை அணியும் சுதந்திரம் இருந்தாலும், சில எல்லைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்” என விமர்சித்திருந்தார்.
இதற்கு கீர்த்தி சனோன் “பண்டிகைகளின் சாராம்சம் அணியும் ஆடைகளில் இல்லை; பாரம்பரியத்தின் மீது கொண்டுள்ள உணர்வுகளிலும் அர்த்தத்திலும்தான் உள்ளது. ரக்ஷா பந்தன் என்பது பாதுகாப்பின் பந்தம். நானும் என் சகோதரியும் ராக்கி கட்டிக்கொள்கிறோம். ஒரு சகோதரன் எப்படிப் பாதுகாப்பான உணர்வைத் தருவானோ, அதேபோல் எங்களை நாங்கள் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை அறிவோம். நாங்கள் ஒருவருக்கொருவரின் உடல்நலம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். இந்தப் பிரார்த்தனையும் வாக்குறுதியும் எங்கள் வீட்டு நாய்களுக்கும் உண்டு. அதுவும் எங்கள் குடும்ப உறுப்பினர்தான். மேலும், பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் என்று சொல்வதை எப்போது நிறுத்தப் போகிறோம்? பாரம்பரிய பேஷன் மாறிவிட்டது, ஆனாலும் ஒரு பெண்ணின் கலாச்சாரத்துக்கான மரியாதை அவளது ஆடைகளைக் கொண்டே அளவிடப்படுகிறது. பண்பாடும் பாரம்பரியமும் அவளது ஆடைகளில் இல்லை, இதயத்தில்தான் இருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் கிருத்தி சனோனுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஆதரவு தெரிவித்துள்ளார். பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பதை சமூக வலைதளங்கள் மூலம் விமர்சித்து கட்டுப்படுத்தக் கூடாது என்றும், அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விளம்பரம் சர்ச்சையானதை அடுத்து நகைக்கடை நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டு விளம்பரத்தை அனைத்து ஊடகங்களிலிருந்தும் அகற்றியது. இந்திய கலாச்சாரம் மற்றும் பண்டிகைகள் மீது தங்களுக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகக் குறிப்பிட்ட அந்த நிறுவனம், குடும்பத்தினருடனும் செல்லப் பிராணிகளுடனும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதே தங்கள் நோக்கமாக இருந்தது என்றும், சில பிரிவினரின் மனதை அறியாமல் புண்படுத்தியதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறி விளம்பரத்தை வாபஸ் பெற்றது.
கிருத்தி சனோனின் ரக்ஷா பந்தன் விளம்பரத்தை சுற்றி எழுந்துள்ள இந்த விவகாரம், தற்போது ஆடைத் தேர்வு மட்டுமின்றி பெண்களின் சுதந்திரம் மற்றும் பாரம்பரிய கலாச்சார எதிர்பார்ப்புகள் குறித்தும் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.