'மஞ்சணத்தி' திரைப்படத்தில் இணைந்த முன்னணி நடிகைகள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு 'மஞ்சணத்தி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
 'மஞ்சணத்தி' திரைப்படத்தில் இணைந்த முன்னணி நடிகைகள்
Published on

மாரி செல்வராஜின் புதிய படைப்பு

'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்', 'மாமன்னன்', 'வாழை', 'பைசன் காளமாடன்' உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள இயக்குநர் மாரி செல்வராஜ், தற்போது தனது ஆறாவது படைப்பாக 'மஞ்சணத்தி' என்ற புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார்.

இந்தப் படத்தின் முக்கிய அம்சமாக இசைஞானி இளையராஜா இசையமைப்பாளராக இணைந்துள்ளார். மாரி செல்வராஜ் மற்றும் இளையராஜா முதல் முறையாக கூட்டணி அமைப்பதால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

'வாழை' படத்தின் தொடர்ச்சியா?

'மஞ்சணத்தி' திரைப்படம், மாரி செல்வராஜின் 'வாழை' படத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, 'வாழை' படத்தில் இடம்பெற்ற சிவநைந்தன் கதாபாத்திரத்தின் பதின்பருவம் மற்றும் இளமைப் பருவ வாழ்க்கையை மையமாகக் கொண்டு கதை நகரும் என கூறப்படுகிறது.

சமீபத்தில் 'மஞ்சணத்தி' படத்தின் தலைப்பு மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்தது.

பிரியங்கா மோகனின் நெகிழ்ச்சி பதிவு

இந்த நிலையில், நடிகை பிரியங்கா மோகன் தனது சமூக வலைதளப் பதிவில், "நான் நீண்ட நாட்களாக அறிவிக்க காத்திருந்த செய்தி இது. இத்தகைய சிறந்த கூட்டணியில் இணைவதில் பெருமிதம் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

கயாடு லோஹரின் உற்சாகமான அறிவிப்பு

அதேபோல் நடிகை கயாடு லோஹரும், "ஒரு கனவு திட்டம் இப்படித்தான் இருக்கும். இறுதியாக இது நனவாகிறது. ஒவ்வொரு கணமும் உச்சத்தை தொடும் கூட்டணி இது" என்று பதிவிட்டுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கம், இளையராஜா இசை, பிரியங்கா மோகன் மற்றும் கயாடு லோஹர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்துள்ளதால், 'மஞ்சணத்தி' திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com