எனக்கு “மிஸ்டர் எக்ஸ்” படம் கற்றுத் தந்த பாடங்கள்... - இயக்குநர் மனு ஆனந்த்

‘மிஸ்டர் எக்ஸ்’ எதிர்பார்த்த அளவுக்கு வசூலில் வெற்றி பெறவில்லை என்று இயக்குநர் மனு ஆனந்த் தெரிவித்துள்ளார்.
எனக்கு “மிஸ்டர் எக்ஸ்” படம்  கற்றுத் தந்த பாடங்கள்... - இயக்குநர் மனு ஆனந்த்
Published on

பிரின்ஸ் பிக்சர்ஸ் , மேவரிக் மூவிஸ் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் வரும் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக் சரத்குமார், மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன், அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன்,காளி வெங்கட் மற்றும் ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த், இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.

ஸ்பை திரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால், கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது. ரூ. 25 கோடியில் உருவான இத்திரைப்படம் ரூ. 5 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.

மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கவுதம் ராம் கார்த்தி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மிஸ்டர் எக்ஸ்’. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனிடையே இப்படம் தொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் மனு ஆனந்த்.

அந்த அறிக்கையில் மனு ஆனந்த், “‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தை பார்த்த, ஆதரித்த அதைப் பற்றி விவாதித்த மற்றும் விமர்சித்த அனைவரிடமும் இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்க சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். ‘மிஸ்டர் எக்ஸ்’ என்பது ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் உருவான திரைப்படம். பொதுமக்கள் ரசிக்கும் வணிக சினிமாவின் பிரம்மாண்டத்தையும் பரபரப்பையும் தக்க வைத்துக் கொண்டு, சற்று மாறுபட்ட குரலில் ஒரு கதையை சொல்ல முயன்ற ஒரு படைப்பு. ஆரம்பத்திலிருந்தே, தனித்துவமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும், பார்வையாளர்களை முழுமையாக ஈர்க்கும் ஒரு திரையரங்கு அனுபவத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாக இருந்தது.

2026 ஏப்ரல் 17 அன்று உலகம் முழுவதும் படம் வெளியானபோது, தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநிலத் தேர்தலின் மிகப்பெரிய போட்டி நிறைந்த வாரத்தில் நாங்கள் களமிறங்கியுள்ளோம் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். படம் பல தரப்பிலிருந்து நல்ல விமர்சனங்களையும், நேர்மறையான பார்வையாளர் கருத்துகளையும் பெற்றிருந்தாலும், நாங்கள் எதிர்பார்த்த அல்லது நம்பிய அளவுக்கு வசூலில் வெற்றி பெறவில்லை.

திரைப்படக் கலைஞர்களாக ஒரு படம் ஏன் பெரிய அளவில் மக்களுடன் இணைகிறது அல்லது ஏன் வணிக ரீதியாக குறைவாக செயல்படுகிறது என்பதை பற்றிய பல கோணங்களில் ஆய்வு செய்யலாம். நீங்கள் யாரிடம் கேட்கிறீர்கள் என்பதைப் பொறுத்து பதில்களும் மாறலாம். ஆனால் இறுதியில்,‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் எழுத்தாளரும் இயக்குநருமான நான், அதன் முழுப் பொறுப்பும் என்னுடையதே என்று நம்புகிறேன். அதை முழு பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். சினிமா என்பது மிக சக்தி வாய்ந்த ஒரு ஊடகம், அதே நேரத்தில் கணிக்க முடியாத ஒன்றும் கூட. ஒவ்வொரு படமும் உங்களுக்கு மதிப்புமிக்க ஏதோ ஒன்றை கற்றுத் தருகிறது. கதை சொல்லலைப் பற்றி, பார்வையாளர்களைப் பற்றி, சரியான நேரத்தைப் பற்றி, உங்களைப் பற்றியும்,‘மிஸ்டர் எக்ஸ்’ என் தொழில் வாழ்க்கையின் மிகப்பெரிய கற்றல் அனுபவங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. அந்தப் பாடங்களை நான் மிகுந்த மரியாதையுடனும் நன்றியுடனும் எடுத்துச் செல்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com