“மாநகரம்”, “கைதி ” படங்களுக்கு விருது அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ், தனக்கு சிறந்த இயக்குநர் விருது அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“மாநகரம்”, “கைதி ” படங்களுக்கு விருது அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த லோகேஷ் கனகராஜ்
Published on

சென்னை,

2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், 2014-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள், மேலும் 2015–2016 கல்வியாண்டு முதல் 2021–2022 கல்வியாண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.இந்த விருதுகளை, பிப்ரவரி 13ம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார்.

திரைப்பட விருதுகளுக்காக நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர். பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்கள் ஆகவும், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியர், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சாய் பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகள் ஆகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மேலும், ‘மாநகரம்’, ‘அறம்’, ‘பரியேறும் பெருமாள்’, ‘அசுரன்’, ‘கூழாங்கல்’, ‘ஜெய் பீம்’, ‘கார்கி’ ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சிறந்த இயக்குநர் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ள ‘மாநகரம்’ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனக்கு விருது அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “‘மாநகரம்’ படத்திற்கு சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த ஆடை வடிவமைப்பு பிரிவுகளில் தமிழ்நாடு திரைப்பட விருது அறிவிக்கப்பட்டதற்கு மனமார்ந்த நன்றிகள்.‘கைதி’ படத்திற்காக சிறந்த நடிகர் விருது பெறும் கார்த்தி, சிறந்த வில்லன் விருது பெறும் அர்ஜுன் தாஸ், சிறந்த சண்டைக் காட்சி இயக்குநர் விருது பெறும் அன்பறிவு மாஸ்டர்ஸ் ஆகியோருக்கும் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com