"மாரீசன்" சினிமா விமர்சனம்

சுதீஷ் சங்கர் இயக்கத்தில் பகத் பாசில், வடிவேலு நடித்த ‘மாரீசன்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
"மாரீசன்" சினிமா விமர்சனம்
Published on

பலே திருடனான பகத் பாசில் ஒரு வீட்டுக்கு கொள்ளையடிக்க செல்கிறார். அப்போது அங்கு சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டு இருக்கும் வடிவேலுவை மீட்கிறார். 'திருவண்ணாமலையில் இருக்கும் நண்பரை பார்க்க என்னை அழைத்து சென்றால், பணம் தருகிறேன்', என பகத்பாசிலிடம், வடிவேலு கூறுகிறார். வடிவேலு வங்கி கணக்கில் ரூ.25 லட்சம் இருப்பதை அறிந்துகொள்ளும் பகத்பாசில், அந்த பணத்தை அபகரிக்க அவருடன் பயணிக்கிறார். வடிவேலு, பகத்பாசிலின் அடையாளங்களை பயன்படுத்தி செல்லும் இடமெல்லாம் சிலரை தேடிப்பிடித்து கொலை செய்கிறார். வடிவேலு யார்? பகத்பாசிலுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு என்ன? கொலைகளுக்கான பின்னணி என்ன? என்பதே பரபரப்பான மீதி கதை.

ஞாபக மறதிக்காரரான வடிவேலுவும், உத்தமன் போல் நடித்து பணத்தை அபகரிக்க முயற்சி செய்யும் பகத் பாசிலும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்வது, ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவர் திட்டம் போடுவது என்று படம் முழுக்க ரசிக்க வைக்கிறார்கள். 

கோவை சரளா, சித்தாரா, விவேக் பிரசன்னா, ரேணுகா, லிவிங்ஸ்டன், பி.எல்.தேனப்பன், கிருஷ்ணா, ஹரிதா உள்ளிட்டோரும் அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசை உணர்வில் கலக்கிறது. பிரச்சினை நிச்சயம் வராது என்பதால் இளையராஜாவின் சில பாடல்களை தைரியமாக சேர்த்திருக்கிறார்.

'கிளைமேக்ஸ்' காட்சி வரை உடைக்கப்படாத ரகசியம் படத்தின் பலம். இருவரை மட்டுமே காட்டியிருக்கும் முதல் பாதியில் சலிப்பு தட்டுகிறது. சில காட்சிகளை எளிதில் யூகிக்க முடிவதும் பலவீனம்.

ஏற்கனவே பல படங்களில் அலசியிருந்தாலும், முக்கியமான சமூக பிரச்சினையை புதிய பாணியில் சொல்லி கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் சுதீஷ் சங்கர்.

மாரீசன் - பொறுமை தேவை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com