

சென்னை,
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு 'மஞ்சணத்தி' என்று பெயரிடப்பட்டுள்ளது. கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டு படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்', 'மாமன்னன்', 'வாழை', 'பைசன் காளமாடன்' உள்ளிட்ட படங்கள் மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள மாரி செல்வராஜ், தற்போது தனது ஆறாவது படைப்பாக 'மஞ்சணத்தி'யை இயக்க உள்ளார்.
இந்த படத்தின் முக்கிய சிறப்பம்சமாக, இளையராஜா இசையமைப்பாளராக இணைந்துள்ளார். மாரி செல்வராஜ் - இளையராஜா கூட்டணி முதல் முறையாக இணைவதால், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
'மஞ்சணத்தி' திரைப்படம், மாரி செல்வராஜின் 'வாழை' படத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, 'வாழை' படத்தில் இடம்பெற்ற சிவநைந்தன் கதாபாத்திரத்தின் பதின்பருவம் மற்றும் இளமை கால வாழ்க்கையை மையமாக கொண்டு கதை நகரும் என கூறப்படுகிறது.
படத்தின் தலைப்பு மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் படக்குழு கூடுதல் தகவல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் தனுஷ் நடிப்பில் பிரமாண்டமான படமொன்றை இயக்க மாரி செல்வராஜ் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தனுஷ் தற்போது பல படங்களில் பிஸியாக இருப்பதால், அந்த திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு 'மஞ்சணத்தி' படப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமான இளையராஜா, தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் 'மஞ்சணத்தி' படத்திலும் இணைந்துள்ளார். இதனால் அவரது இசையில் உருவாகும் அடுத்தடுத்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.