“கருப்பு” படத்தில் நான் நடித்த காட்சிகள் நீக்கம் - மன்சூர் அலிகான் ஆதங்கம்

மன்சூர் அலிகான் ‘கருப்பு’ படம் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“கருப்பு” படத்தில் நான் நடித்த காட்சிகள் நீக்கம் - மன்சூர் அலிகான் ஆதங்கம்
Published on

‘கருப்பு’ படத்தில் தான் நடித்த பாடல் காட்சிகள் இடம் பெறாதது குறித்து நடிகர் சூர்யா, இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரை நடிகர் மன்சூர் அலிகான் கடுமையாக விமர்சித்தார்.

பிரபு நடித்த ‘வேலை கிடைச்சிடிச்சு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான், ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 350 படங்களுக்கு மேல் நடித்ததுடன், பல படங்களை தயாரித்தும் இருக்கிறார். சமீபத்தில் தவெக கட்சியில் மன்சூர் அலிகான் இணைந்துள்ளார்.

‘ஆல்பாஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

தர்ஷன் ஜெயபிரகாஷ், பிக் பாஸ் ஜனனி ஆகியோரது நடிப்பில், ‘ஆல்பாஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டார்.

கருப்பு படத்தில் என்னுடைய நடிப்பு இருட்டடிப்பு

அந்த நிகழ்வில் நடிகர் மன்சூர் அலிகான் பேசுகையில், “சமீபத்தில் நான் நடித்து பெருவெற்றி பெற்ற ’கருப்பு’ படத்தில் என்னுடைய நடிப்பினை இருட்டடிப்பு செய்துள்ளனர். அப்படத்தில் இடம்பெற்ற ‘நாங்கள் நாலு பேரு’ பாடலில் மிகவும் சிரமப்பட்டு ஆடினோம். அதை நேரமின்மை காரணத்தினால் படத்தில் இருந்து எடுத்திருப்பதாக தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு கூறியிருந்தார். அப்படி என்றால் அந்தப் பாடல் வேறு ஏதாவது தளத்தில் வருமா? என்று கேட்ட போது யூடியூப் தளத்தில் வரும் எனக் கூறினார்.

இருந்த போதிலும், யூடியூப் தளத்தில் கூட அந்த பாடல் இடம் பெறவில்லை. ஏனென்று தயாரிப்பாளரிடம் மறுபடியும் நான் கேட்ட போது அதை அப்படியே விற்று விட்டோம் என பொறுப்பில்லாமல் பதில் கூறுகிறார். எனக்கு வயது இருக்கிறது இன்னும் நூறு படங்கள் கூட நடிப்பேன். அதில் நிச்சயமாக என்னுடைய திறமையை வெளிப்படுத்துவேன். இந்த மேடையில், நான் இதை சொல்வதற்கு காரணமாவது எனக்குள் இருக்கக்கூடிய ஆதங்கம். கிட்டத்தட்ட 350க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறேன்.

எனக்கே திரையுலகில் இந்த நிலைமை என்றால், புதிதாக வரக்கூடியவர்கள் நிலைமை மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. படத்தின் கதாநாயகன் சூர்யா, இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எல்லோருமே நல்ல பெயர் வாங்கட்டும், பணம் சம்பாதிக்கட்டும். ஆனால் எங்களைப் போன்ற கலைஞர்களை எதற்காக இருட்டடிப்பு செய்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசுகையில், “நான் கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறேன் அதில் பணியாற்றிய கதாநாயகன் மற்றும் இயக்குனரின் கால் தூசுக்கு இவர்கள் எல்லாம் வருவார்களா?. கருப்பு படத்தின் பாடல் காட்சி எடுக்கும் போது என்னுடைய மகனை அழைத்துச் சென்றிருந்தேன். திரைப்படம் பார்க்கவும் மகனை அழைத்துச் சென்ற போது, அவன் நீங்கள் நடித்த பாடல் காட்சி ஏன் வரவில்லை? என கேள்வி எழுப்பினான். அதற்கு நான் அவரிடம் பதில் சொல்ல முடியவில்லை” என கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com