திருமணம் செய்வதாக மோசடி... நடிகை பூர்ணா வழக்கில் கோர்ட்டு புதிய உத்தரவு

நடிகை பூர்ணாவை திருமணம் செய்வதாக மோசடியில் ஈடுப்பட்ட கும்பல் மீதான வழக்கில் கோர்ட்டு புதிய உத்தரவு வழங்கியது.
திருமணம் செய்வதாக மோசடி... நடிகை பூர்ணா வழக்கில் கோர்ட்டு புதிய உத்தரவு
Published on

தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி, காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பூர்ணா மலையாளம், தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு துபாய் தொழில் அதிபருடன் பூர்ணாவுக்கு திருமணம் நடந்தது. கடந்த 2020-ல் பூர்ணா திருமண மோசடி கும்பலிடம் சிக்கியது பரபரப்பானது. அப்போது பூர்ணாவை ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு துபாயில் நகைக்கடை வைத்து இருப்பதாகவும், பூர்ணாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். பின்னர் சிலர் பூர்ணாவை பெண் கேட்டு அவரது வீட்டுக்கும் சென்றனர். அதன்பிறகு பூர்ணாவிடம் பணம் கேட்டும், தங்க கடத்தலில் ஈடுபடும்படியும் மிரட்டினர். இதுகுறித்து பூர்ணாவின் தாய் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி ரபீக், முகமது செரீப், ரமேஷ், அஷ்ரப், ரகீம், அபுபக்கர் உள்பட 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு எர்ணாகுளம் முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹனி வர்கீஸ் 10 குற்றவாளிகளையும் டிசம்பர் 12-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com