“மாதவிடாய் தீட்டு அல்ல; கடவுள் பெண்களுக்கு கொடுத்த வரம்” - நடிகை அர்ச்சனா பேச்சு

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட ஒரு அனுபவத்தை நடிகை அர்ச்சனா பகிர்ந்துள்ளார்.
சென்னை,
நவீன் கணேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'பல்ஸ்'. படத்தில் கதாநாயகனாக மகேந்திரன் மற்றும் கூல்சுரேஷ், அர்ச்சனா, கே.பி.ஒய்.சரத் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அபிஷேக் இசை அமைத்துள்ளார். குளோபர் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இந்த விழாவில் நடிகை அர்ச்சனா பேசியதாவது:- மாதவிடாய் என்பது எந்த வகையிலும் தீட்டு அல்ல. அது கடவுள் பெண்களுக்கு கொடுத்த ஒரு வரம். அதுவே பெண்களை தாயாக மாற்றும் அடிப்படை. அதில் அவமானப்பட வேண்டிய எந்த விஷயமும் இல்லை என்று அவர் தெளிவாக கூறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட ஒரு அனுபவத்தை நினைவு கூர்ந்த அவர், அந்த சமயத்தில் எனக்கு ஏற்பட்ட உடல் வலியை புரிந்து கொண்டு, ஒரு சகோதரராக கூல் சுரேஷ் எனக்கு உதவி செய்தார். பெண்கள் அந்த காலகட்டத்தில் அனுபவிக்கும் உடல் வலி மற்றும் மனநிலை மாற்றங்களை புரிந்து கொள்வது அவசியம். அத்தகைய புரிதலுடன் செயல்பட்ட ஒரு ஆணாக அவர் இருந்தது எனக்கு பெருமையாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.






