

சென்னை,
விஜய் நடித்த மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடி கொண்டுள்ளது. வசூலிலும் இந்த படம் சாதனை நிகழ்த்தி வருகிறது.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி. வரி பற்றிய வசனத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஜி.எஸ்.டி. வசனத்தை நீக்க வேண்டும் என்று பா.ஜனதா கட்சியினர் வற்புறுத்தி உள்ளனர்.
மெர்சல் படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி மற்றும் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் டுவிட்டர் வழியே ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனை எதிர்க்கும் வகையில் பாரதீய ஜனதாவினர் பதிலளித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த படத்தினை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும் கருத்துகளை நீக்க வேண்டுமெனில் அதற்கு தயாராகவே இருக்கிறோம். திரைப்படத்தினை யாரையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கவில்லை.
வெளியான சில நாட்களிலேயே மெர்சல் படம் சர்ச்சைக்குள்ளானது வேதனை அளிக்கிறது.
பாரதீய ஜனதாவினர் பார்வையில் அவர்கள் எதிர்ப்பு நியாயமாகவே உள்ளது. சர்ச்சைகள் பற்றி பாரதீய ஜனதாவின் முக்கிய தலைவர்களை சந்தித்து படைப்பின் நோக்கத்தினை விளக்கினோம். விளக்கத்தினை பாரதீய ஜனதா தலைவர்கள் பெருந்தன்மையுடன் ஏற்று கொண்டனர்.
மெர்சல் படம் யாருக்கும் எதிரானது அல்ல. அரசுக்கு எதிரான படமும் அல்ல என மெர்சல் திரைப்பட தயாரிப்பாளர் முரளி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.