“மீ டூ தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன” நடிகை லைலா சொல்கிறார்

மீ டூவில் வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக நடிகை லைலா கூறி இருக்கிறார்.
“மீ டூ தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன” நடிகை லைலா சொல்கிறார்
Published on

கள்ளழகர், முதல்வன், தீனா, தில், காமராசு, உள்ளம் கேட்குமே, நந்தா, பிதாமகன் உள்பட பல படங்களில் நடித்தவர், லைலா. இவர், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். கடந்த 2006-ல் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். மும்பையில் வசித்து வரும் லைலாவுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.

திரையுலகை உலுக்கி வரும் மீ டூ இயக்கம் குறித்து லைலா கருத்து தெரிவித்து இருக்கிறார். அவர் கூறியதாவது:-

மீ டூவில் வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. பாலியல் தொல்லைகளுக்கு முடிவு கட்ட பெண்கள் களத்தில் இறங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லா துறைகளிலுமே பெண்களுக்கு பாதிப்புகள் உள்ளன. சினிமா துறையிலும், பெரிய கார்ப்பரேட் அலுவலகங்களிலும் பாலியல் தொல்லைகள் நடக்கிறது.

சுயலாபத்துக்காக பெண்களை ஆண்கள் பயன்படுத்துவதற்கு எதிராக பெண்கள் திரண்டு இருக்கிறார்கள். பெண்களிடம் ஆண்கள் தவறாக நடக்க முயற்சிப்பது, இழிவான செயல். பெண்களை குறைத்து மதிப்பிடுவதை நிறுத்த வேண்டும். திருமணத்துக்கு பிறகு ஒதுங்கியிருந்த எனக்கு இப்போது நடிக்க ஆசை வந்து இருக்கிறது. எனக்கு முக்கியத்துவம் உள்ள கதை மற்றும் கதாபாத்திரத்துக்காக காத்திருக்கிறேன்.

என் மனதை பாதிக்கும் கதை ஏதேனும் தோன்றினால், அதை டைரக்டு செய்யும் ஆசையும் இருக்கிறது. ஆனால் ஒருபோதும் படங்களை தயாரிக்க மாட்டேன். இப்போதெல்லாம் பெண்களை மையப்படுத்தி படங்கள் வருவது, வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com