

சென்னை,
ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் நடித்துள்ள ‘மொத ராத்திரி’ படத்தை பாராட்டி நடிகர் சூரி பதிவிட்டுள்ளார். அதில், மொத ராத்திரி' படத்தோட தலைப்பு கொஞ்சம் வித்தியாசமா தெரிஞ்சாலும், படத்தைப் பார்த்ததுக்கப்புறம் இதுதான் சரியான தலைப்புன்னு தோணுச்சு... படம் வேற லெவல்... நிச்சயம் வெற்றிபெறும். என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் கவனம் ஈர்த்து வரும் நடிகை அனிஷ்மா. கடந்த 2023-ல் வெளியான மலையாள திரைப்படமான 'பூவன்' மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், தமிழில் சமீபத்தில் வெளியான 'சிறை' மற்றும் 'யூத்' படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
‘மொத ராத்திரி’
தற்போது, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மொத ராத்திரி’ படத்தில் அனிஷ்மா கதாநாயகியாக நடித்துள்ளார். ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு பரத் ஷங்கர் இசையமைக்கிறார். புதிதாகத் திருமணமான ஜோடியின் வாழ்வில் நடைபெறும் காதல், நகைச்சுவைத் தொடர்பான கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
இப்படம் ஆகஸ்ட் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், இந்த படத்திலிருந்து ‘டை டக்கா’ , ‘முதலா முடிவா’, என்ற பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில், நடிகர் சூரி 'மொத ராத்திரி' படத்தின் சிறப்பு காட்சியை பார்த்தபின் படக்குழுவினரை வாழ்த்தியும், படம் குறித்தும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'மொத ராத்திரி' படத்தோட தலைப்பு கொஞ்சம் வித்தியாசமா தெரிஞ்சாலும், படத்தைப் பார்த்ததுக்கப்புறம் இதுதான் சரியான தலைப்புன்னு தோணுச்சு... குலதெய்வ வழிபாட்டுல ஆரம்பிச்சு, கண்மூடித்தனமான காதலின் எதார்த்தத்தையும், குடும்ப உறவுகளுக்குள்ள நடக்கும் அலப்பறைகளையும் காட்டியிருக்கும் விதம் வேற லெவல்...
படத்தில் நடித்த அனைவருக்கும்... குறிப்பா இயக்குநருக்கும் மற்றும் மைத்ரி நிறுவனம் மற்றும் படக்ழுவினர் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள். படம் நிச்சயம் வெற்றிபெறும். என்று தெரிவித்துள்ளார்.