

சென்னை,
நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி ஓடி கொண்டிருக்கிறது.
படத்தில் முழுக்க முழுக்க தமிழக அரசியலை விமர்சனம் செய்யும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன என கூறப்பட்டது. தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை தூக்கி எறிவது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. இது அ.தி.மு.க.வினரை கோபம் அடைய செய்தது.
இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சர்கார் திரைப்படத்தின் பேனர்களையும், கட் அவுட்டுகளையும் சேதப்படுத்தி அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டங்களின்பொழுது முன் ஜாமீன் கேட்டு நவம்பர் 9ந்தேதி முருகதாஸ் மனு செய்துள்ளார். இயக்குநர் முருகதாசை வரும் 27ந்தேதி வரை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் முன்பே உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், சர்கார் படத்தில் அரசின் நலத்திட்டங்களை விமர்சித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது. அரசையோ அரசின் நலத்திட்டங்களையோ விமர்சிக்க மாட்டேன் என உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்யவும் வலியுறுத்தி உள்ளது.
அரசின் கோரிக்கை பற்றி முருகதாஸ் விளக்கமளிக்க உத்தரவிட்டு, அவரது முன்ஜாமீன் வழக்கு நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.