என்னுடைய சினிமா பயணம் தமிழில் இருந்துதான் தொடங்கியது - ரவி தேஜா

ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘இருமுடி கட்டு’ படம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வெளியானது.
என்னுடைய சினிமா பயணம் தமிழில் இருந்துதான் தொடங்கியது - ரவி தேஜா
Published on

1990-களின் நடுப்பகுதியில் தனது திரையுலக வாழ்க்கைக்கான ஆரம்ப கட்ட போராட்டங்கள் அனைத்தும் சென்னையிலேயே தொடங்கியதாக ரவி தேஜா கூறியுள்ளார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி தேஜா, ரசிகர்களால் ‘மாஸ் மகாராஜா’ என அன்புடன் அழைக்கப்படுகிறார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் சிவா நிர்வானா இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘இருமுடி கட்டு’. ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள இந்தப் படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ‘இருமுடி கட்டு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. ‘இருமுடி கட்டு’ படம் 3 நாட்களில் ரூ.47 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் மொழி மீது தீராத ஆர்வம்

விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரவி தேஜா, தனக்கும் தமிழ் மொழிக்கும் இடையிலான ஆழமான பிணைப்பு குறித்துப் பகிர்ந்து கொண்டார். தமிழ் மொழியின் மீது தனக்கு எப்போதுமே ஒரு தனித்துவமான ஈர்ப்பும், அதன் பேச்சு வழக்கில் இருக்கும் நகைச்சுவை மற்றும் இயல்பான அழகின் மீது மிகுந்த விருப்பமும் உண்டு என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “1990-களின் நடுப்பகுதியில் தனது திரையுலக வாழ்க்கைக்கான ஆரம்ப கட்ட போராட்டங்கள் அனைத்தும் சென்னையிலேயே தொடங்கின என்பதை நினைவுகூர்ந்தார். சென்னை நகரம் தான் தனது சினிமா பயணத்தின் அடித்தளமாக விளங்கியது என்றும், இங்குள்ள மனிதர்களுடனும் திரையுலகத்துடனும் தனக்கு நீங்காத நினைவுகள் உண்டு” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஜி.வி.பிரகாஷின் இசை

இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரைப் பற்றி பேசிய ரவி தேஜா, இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் தான் உண்மையான ஆன்மா என்று புகழாரம் சூட்டினார். பின்னணி இசை இல்லாமலேயே படத்தைப் பார்த்தபோது தனக்குள் பெரும் உணர்ச்சிப் பெருக்கு ஏற்பட்டதாகக் கூறிய அவர், ‘இருமுடி கட்டு’ திரைப்படம் பார்க்கும் ஒவ்வொருவரின் இதயத்தையும் தொடும் ஒரு உணர்வுப்பூர்வமான படைப்பாக இருக்கும் என உறுதி அளித்தார்.

பிரியா பவானி சங்கர் பேசுகையில், “ரவி தேஜா போன்ற நடிகர்கள், சினிமாவுக்கு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம். ஏனெனில் திரையில் தான் அவர் ஸ்டார் ஆக தெரிவார். ஆனால் நிஜத்தில் மிகவும் எளிமையான மனிதர். அவரிடம் பந்தா என்பதே கிடையாது. சினிமாவில் தற்போது ஒவ்வொரு அடியையும் பார்த்து எடுத்து வைத்து வருகிறேன். நிச்சயம் ரசிகர்கள் விரும்பும்படியான நடிப்பை கொடுப்பேன். 'இருமுடி' திரைப்படம் எனது திரைப் பயணத்தில் மிக முக்கியமான படமாக இருக்கும்” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com