

சென்னை,
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வரும் திவ்யபாரதி, ரசிகர்களின் அன்புதான் தனது மிகப்பெரிய பலம் என்றும், அவர்களை தொடர்ந்து மகிழ்விப்பதே தனது இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.
மாடலிங் துறையின் மூலம் திரையுலகில் அறிமுகமான திவ்யபாரதி, 'பேச்சுலர்', 'கிங்ஸ்டன்', 'மதில் மேல் காதல்', 'ஆசை', 'லிங்கம்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
திரைப்படங்களைத் தாண்டி சமூக வலைத்தளங்களிலும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் திவ்யபாரதி, அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். குறிப்பாக தனது நீளமான கூந்தல் மற்றும் ஸ்டைலான தோற்றத்தால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
ரசிகர்கள் குறித்து பேசிய திவ்யபாரதி, "சினிமாவுக்கு வந்த புதிதில் இவ்வளவு ரசிகர்கள் எனக்கு கிடைப்பார்கள் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ரசிகர்கள் என் மீது காட்டும் அன்பும், பாசமும் என்னை ஒவ்வொரு நாளும் உற்சாகப்படுத்துகிறது. அவர்கள்தான் என் மிகப்பெரிய பலம்" என்று கூறினார்.
மேலும், "ரசிகர்களை என் வசப்படுத்தி வைத்திருப்பதே என் லட்சியம். மற்ற கதாநாயகிகளைப் போல நானும் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்க விரும்புகிறேன். என் ரசிகர்களுக்காக தொடர்ந்து அவர்களை மகிழ்விக்கும் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுவேன். தரமான கதைகளைத் தேர்வு செய்து நடிப்பதன் மூலம் அவர்களின் அன்புக்கு நியாயம் செய்வேன்" என்று திவ்யபாரதி தெரிவித்தார்.