

சென்னை,
அமெரிக்காவின் மிச்சிகனில் பிறந்து, பெங்களூருவில் வளர்ந்தவர் ஶ்ரீலீலா. கடந்த 2019-ம் ஆண்டு 'கிஸ்' திரைப்படம் மூலம் கன்னடத்தில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கில் 'பகவந்த் கேசரி', 'குண்டூர்காரம்' திரைப்படங்கள் மூலம் தெலுங்கில் முன்னணி நடிகையானார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'பராசக்தி' படத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார். தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் 'தனுஷ் 55' படத்தில் ஶ்ரீலீலா நடிக்கிறார்.
இந்த நிலையில், சென்னை வந்திருந்த ஶ்ரீலீலா, பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “நான் டாக்டருக்கு படித்துவிட்டு சினிமாவுக்கு வந்தேன். தற்போது மருத்துவ படிப்பில் இன்டர்னாக இருக்கிறேன். மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை. எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக செய்வேன்” என்றார்.
மேலும் தனது வெற்றியின் பின்னணியில் தாயின் பங்கு மிகப்பெரியது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்த அவர், “சினிமாவிலும், வாழ்க்கையிலும் நான் ஜெயிக்க என் அம்மாதான் காரணம். அவர் எப்போதும் எனக்கு வலிமையாக இருக்கிறார். என் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் அவரது ஆதரவு இருக்கிறது. எல்லோருடைய வாழ்க்கையிலும் அம்மா முக்கியமானவர்தான்” என்று கூறினார்.
‘லேடி சூப்பர்ஸ்டார்’ பட்டம் குறித்து ஶ்ரீலீலாவிடம் கேட்கப்பட்டபோது, அதற்கு, “என்னை சிலர் லேடி சூப்பர்ஸ்டார் என்கிறார்கள். ஆனால் அந்த பட்டத்துக்கு பொருத்தமானவர் நயன்தாரா அக்காதான். அவர் என் ரோல் மாடல். என்றார். மேலும், சென்னை பசங்களை ரொம்ப பிடிக்கும். சென்னை தோசை மிகவும் பிடித்த உணவு. நயன்தாரா மாதிரி சென்னையில் திருமணம் செய்வேனா என்பது தெரியாது. அதற்கு இன்னும் காலம் இருக்கிறது” என்று சிரிப்புடன் கூறினார்.