

தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் எடப்பாடி தொகுதியைத் தவிர்த்து மொத்தம் 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட த.வெ.க., 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தமிழ்நாட்டின் 50 ஆண்டுகால திராவிட ஆட்சிகள் முடிவுக்கு வந்திருக்கின்றன.
2024-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக கட்சி தொடங்கி, 2026-ம் ஆண்டு மாபெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவாகியிருக்கிறது. கொளத்தூர் தொகுதியிலேயே திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வியைத் தழுவியிருக்கிறார்.
இந்த நிலையில், திமுக கட்சியின் தீவிர ஆதரவாளரான நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் “விஜய் அவர்களுக்கும் தவெக எம்.எல்.ஏ-க்களுக்கும் தொண்டர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய கொள்கை தலைவர்கள் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் என்று விஜய் கூறியிருந்தார். அவர்கள் வழிநின்று ஒரு சிறப்பான, சமூக நீதி ஆட்சியைத் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
என்னுடைய அன்புச் சகோதரர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் தோல்வி எனக்கு உண்மையிலேயே மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆனால் அவர் தோல்வியைக் கண்டு துவண்டு விடுபவர் அல்ல. கடந்த ஐந்த ஆண்டுகளாக ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, டெல்லிக்கு அஞ்சாமை என்ற நிலைப்பாட்டில் நின்று பல வளர்ச்சி திட்டங்கள், நலத்திட்டங்களைக் கொண்டுவந்து இந்திய ஒன்றியத்தின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியதற்கு, என்னுடைய நன்றியைக் கூறிக்கொண்டு, அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன்.
இந்தத் திராவிட மாடல் அரசின் நிலைப்பாட்டின் காரணமாக நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக திராவிட மாடல் அரசுக்கும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கும் ஆதரவாளனாக இருந்தேன். இனிவரும் காலங்களிலும் அதேபோல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், என்னுடைய ஆதரவு இன்னும் வலுவாக இருக்கும் என்று பெருமையோடும், மன உறுதியோடும், மன மகிழ்வோடும் மகிழ்ச்சியோடும் கூறிக்கொள்கிறேன்” என குறிப்பிட்டிருக்கிறார்.