

நிவின் பாலி , மமிதா பைஜு நடித்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படம் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி தமிழில் வெளியாகவுள்ளது.
‘பிரேமலு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அதன் 2-ம் பாகத்தை இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இயக்கி வந்தார். ஆனால், கதையில் முழுமையான திருப்தி ஏற்படாததால் அப்படத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கிரிஷ் ஏ.டி. இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’. இப்படத்தில் நிவின் பாலி கதாநாயகனாகவும், மமிதா பைஜு கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
ஷியாம், சங்கீத் பிரதாப், வினய் போர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பகத் பாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷியாம் புஷ்கரன் ஆகியோர் ‘பாவனா ஸ்டுடியோஸ்’ சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளனர். விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் 3 நாள் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் 3 நாட்களில் ரூ.63 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
காதல் மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருவதால், விரைவில் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படம் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி தமிழில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.