

சென்னை,
நடிகர் அஜித் - ஷாலினி திருமண நாளை முன்னிட்டு இருவரும் இணைந்து நடித்த 'அமர்க்களம்' படம் மீண்டும் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இது குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
எப்போது வெளிவந்தாலும் அமர்க்களம் அமர்க்களம்தான். எந்தப் பாட்டுக்கும் இல்லாத ஒரு சிறப்பு ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ பாட்டுக்கு உண்டு 89 வரிகள் கொண்ட நீண்ட பாட்டு இதுதான். ஒவ்வொரு வரிக்கும் புத்தம்புது உணர்ச்சி காட்டிப் புயல்போல் நடித்துக் காட்டிய அஜித்தே உங்களுக்குப் பாராட்டு.
இயக்குநர் சரண் இசையமைத்த பரத்வாஜ் இருவருக்கும் வாழ்த்து. செஞ்சிக்கோட்டை உள்ளவரை தேசிங்கு ராஜனும் இருப்பான்; செஞ்சி மலையில் படமாக்கப்பட்ட இந்தப் பாட்டும் இருக்கும். எஸ்.பி.பி-யின் இன்மையை இப்போது உணர்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.