வடசென்னை இரண்டாம் பாகம் நிச்சயம் வரும் - தனுஷ்

'வட சென்னை 2' படம் நிச்சயம் வரும் என்று நடிகர் தனுஷ் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வடசென்னை இரண்டாம் பாகம் நிச்சயம் வரும் - தனுஷ்
Published on

வெங்கி அட்லூரி இயக்கிய 'வாத்தி' படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். நாயகியாக சம்யுக்தா வருகிறார். சமுத்திரக்கனி உள்பட மேலும் பலர் நடித்துள்ளனர். இந்த பட விழா நிகழ்ச்சியில் தனுஷ் பேசும்போது, ''வாத்தி படத்தில் நடிக்க முடியாது என்று மறுக்க நினைத்தேன். ஆனால் கதையை கேட்டதும் பிடித்து போனதால் நடித்தேன். இது 1990-களில் நடக்கிற கதை. அந்த வருடத்தில் நிஜமாகவே நான் படித்துக்கொண்டு இருந்தேன்.

அப்போது ஆசிரியர் வேலை மிகவும் எளிதானது என்று நினைத்தேன். ஆனால் இந்த படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில் வாத்தியார் வேலை எவ்வளவு கஷ்டம் என்பது புரிந்தது. ஆசிரியர்கள் கையில்தான் மாணவர்கள் தலை எழுத்து உள்ளது. படிப்பு ரொம்ப முக்கியம்.

எனது வாகனத்தை ரசிகர்கள் பின் தொடர்ந்து வருவதை பார்க்க பயமாக இருக்கிறது. உங்களை நம்பி பெற்றோர் இருக்கிறார்கள். பின்னால் வேகமாக வருவதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. எனவே அப்படி வராதீர்கள்.

வடசென்னை 2-ம் பாகம் எப்போது உருவாகும் என்று என்னிடம் கேட்கிறார்கள். அதை டைரக்டர் வெற்றிமாறனிடம்தான் கேட்க வேண்டும். ஆனாலும் 'வட சென்னை 2' படம் நிச்சயம் வரும்'' என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com