

சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 24 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 11 இடங்களிலும், அதிமுக கூட்டணி 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் தற்போதைய நிலவரப்படி தவெக 85 இடங்களிலும், திமுக கூட்டணி 62 இடங்களிலும், அதிமுக கூட்டணி 46 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள விஜய்க்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் நடிகர் சிபி சத்யராஜ் தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
"கூட்டம் ஓட்டா மாறாது" - மாறிடுச்சு!, "ஓட்டு சீட்டா மாறாது " - மாறிடுச்சு!, “நடிகன் நாடாள முடியாது" - ஆளப்போகிறார், "அவர் திரும்ப நடிக்க போய் விடுவார் " - வாய்ப்பில்லை ராஜா, "அவருக்கு அரசியல பத்தி என்ன தெரியும் ?" - பாக்க தானே போறீங்க, "விஜய் இவராக முடியாது... விஜய் அவராக முடியாது”.. - எவராலும் விஜய் ஆக முடியாது!
அன்புள்ள விஜய் அண்ணா, அபாரமான திறமை, கடின உழைப்பு, பேரார்வம், ஒழுக்கம், தளராத கவனம் மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றால் உங்கள் சினிமாவில் உச்சத்தை அடைந்தீர்கள். ஆனாலும், உங்கள் வாக்குறுதியைக் காப்பாற்றி அரசியலில் இறங்க முடிவு செய்தீர்கள். அதே குணங்களாலும், உங்கள் மக்களுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற தூய நோக்கத்தாலும் இப்போது நீங்கள் சரித்திரம் படைத்துள்ளீர்கள்.
கூட்டணிகள் விஷயத்தில் உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தீர்கள். பல ஆண்டுகளாக நீங்கள் சந்தித்த அனைத்து சிரமங்களையும் மீறி உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றீர்கள்.
அண்ணா, நீங்கள் திரையில் பலரைத் துவம்சம் செய்வதைப் பார்த்து நாங்கள் விசில் அடித்தோம், இப்போது அதை அரசியலிலும் மெய்ப்பித்துள்ளீர்கள். உங்கள் ரசிகர்களையும், ஆதரவாளர்களையும் பெருமைப்படுத்தி, உங்கள் தனித்துவமான பாணியில் அனைத்து எதிர்மறைப் பேச்சாளர்களின் வாயையும் அடைத்துவிட்டீர்கள். இறுதியாக, மக்கள் பணத்திற்காக அல்ல, உண்மைக்காகவே வாக்களிக்கிறார்கள் என்பதை நிரூபித்து தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். நன்றி தலைவா. உங்கள் அனைவருக்கும் நன்றி. தமிழ்நாட்டின் மகன் உதயமாகிறார்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.