

ஐதராபாத்
தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், நடிகருமான என்.டி.ஆர் என அழைக்கப்படும் என்.டி. ராமாராவின் பேரன் ஆவார்.ஜூனியர் என்டிஆர் இன்று தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
1991-ல் குழந்தை நட்சத்திரமாக ஜூனியர் என்.டி.ஆர். அறிமுகம் ஆனார். அவர் நடிப்பில் கடைசியாக திரைக்கு வந்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் இந்தியா முழுவதும் மெகா ஹிட் ஆனது.வெளிநாடுகளிலும் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பை சினிமா விமர்சகர்கள் வெகுவாக பாராட்டியிருந்தனர். இன்று அவர் தனது 39வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், ரசிகர்களும் திரைத்துறையினரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இதையொட்டி ஜூனியர் என்.டி.ஆரின் அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதுவரை அவர் 29 படங்களில் நடித்துள்ளார். அவரது 30வது படத்தை கொரட்டல சிவா இயக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதேபோன்று ஜூனியர் என்.டி.ஆரின். 31வது படத்தை கே.ஜி.எஃப். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப். 2 ஆகிய படங்களை தொடர்ந்து இந்தியா முழுவதும் ஹீரோக்களால் அதிகம் விரும்பப்படும் இயக்குனராக பிரசாந்த் நீல் மாறியுள்ளார்.
பிரசாந்த் தற்போது பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் பிசியாகியுள்ளார்.
இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆர். படத்தை பிரசாந்த் நீல் இயக்குவார் என அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகியுள்ளது.