

நடிகர்-நடிகைகள் டுவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் கணக்குகள் தொடங்கி தங்களது புகைப்படங்கள், நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் பற்றிய தகவல்கள், அரசியல் சமூக கருத்துகள் போன்றவற்றை பகிர்ந்து வருகிறார்கள். இந்த கணக்குகளுக்குள் மர்ம நபர்கள் ஊடுருவி முடக்குவதும் அவதூறு கருத்துகளை அவற்றில் பதிவேற்றம் செய்வதும் வழக்கமாக நடக்கிறது. இந்த நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமாரின் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மர்ம நபரால் முடக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து வரலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில், என் சமூக வலைத்தள பக்கங்கள் முடக்கப்பட்டு உள்ளன. அதை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. சீராவதற்கு சில நாட்கள் ஆகலாம். அதுவரை எனது டுவிட்டர் அல்லது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வரும் தகவல்களில் என்னை பின் தொடர்வோர் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எனது கணக்குகள் மீட்கப்பட்ட பிறகு நானே தெரிவிக்கிறேன். எனக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி என்று தெரிவித்து உள்ளார்.