

குடியரசு தினத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை மற்றும் டெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் கொடி ஏற்றிய சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. தமிழில் ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் நடித்து வரும் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் விவசாயிகள் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்பவர்களையும் கண்டித்து வருகிறார். விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து சொன்ன அமெரிக்க பாப் பாடகி ரிஹானாவை முட்டாள் என்று சாடினார். இதுபோல் ரிஹானா கருத்தை ஆமோதித்த பஞ்சாபை சேர்ந்த பிரபல பாடகரும், நடிகருமான தில்ஜித் தோசஞ்சை காலிஸ்தான் பயங்கரவாதி என்று டுவிட்டரில் குற்றம் சாட்டினார். இந்த நிலையில் கங்கனாவின் சர்ச்சைக்குரிய பதிவுகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது. விதிமுறைக்கு எதிராக உள்ளதால் அவரது பதிவுகள் நீக்கப்பட்டு உள்ளதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்து உள்ளது.