

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் அளவில் அவரது உயிர் பிரிந்தது. செளகார் ஜானாகியின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் 1931-ல் பிறந்தவர் செளகார் ஜானகி . தந்தை காகித மில் அதிபர். இவரது தொழில் காரணமாக பல்வேறு இடங்களில் வசிக்க நேர்ந்தது. சென்னையில் வசித்தபோது, சாரதா வித்யாலயாவில் படித்தார். குழந்தைகளுக்கான வானொலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தனது 15 வயதில் ஆல் இந்தியா ரேடியோவில் அறிவிப்பாளராக பணியாற்றினார். அவரது குரலைக்கேட்டு தெலுங்குப்பட தயாரிப்பாளர் அவரை திரைப்படத்தில் நடிக்க அணுகியபோது அவரது குடும்பத்தார் மறுத்து அவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். ஒரே ஆண்டில் குழந்தை, குடும்ப வறுமை, கணவரிடம் நிலையைச் சொல்லி அதே தயாரிப்பாளர் வி.என்.ரெட்டி வீட்டு வாசல் கதவை கைக்குழந்தையுடன் தட்டினார் சௌகார் ஜானகி.
கைக்குழந்தை, திருமணமாகிவிட்டது, சாத்தியமே இல்லையம்மா என தயாரிப்பாளர் சொல்ல குடும்ப நிலையை கூறியுள்ளார் சௌகார் ஜானகி. தயாரிப்பாளர் அவர் தம்பி எடுக்கும் படத்திற்கு அவரை சிபாரிசு செய்ய நடிகர் என்.டி.ராமாராவ் கதாநாயகனாக அறிமுகமான ‘சௌகார்’படத்தில்கதாநாயகியாக அறிமுகமானார். 1947 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை எல்.வி.பிரசாத் இயக்கியிருந்தார். அன்றைய காலகட்டத்தில் வி.என்.ஜானகி என்றொரு கதாநாயகி நடிகை இருந்ததாலும் ,இவர் சௌகார் படத்தில் அறிமுகமானதாலும் சௌகார் ஜானகி ஆனார்.
தமிழ் சினிமாவில் பல்வேறு பாத்திரங்களை பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மு.கருணாநிதி கதை வசனத்தில் ‘குலக்கொழுந்து’ படத்தில் நடித்துள்ளார் சௌகார் ஜானகி. தமிழில் பாவேந்தர் பாரதிதாசன் வசனம் எழுதிய வளையாபதி படத்தில் அவரது வசனத்தை பேசி நடித்துள்ளார். நடிகவேள் எம்.ஆர்.ராதாவுடன் குமுதம் படத்தில் நடித்துள்ளார். தமிழில் ஜெமினி கணேசன், ஜெய்ஷங்கர், சிவகுமார், ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் என்கிற பெருமை இவருக்கு உண்டு . 73 வருடங்களாக திரையில் ஜொலித்த சவுகார் ஜானகி, 4 முதல்வர்களுடன் சினிமாவில் சம காலத்தில் பயணித்தவர். ஆந்திர முதல்வராக இருந்த என்.டி ராமராவ், தமிழக முதல்வர்களாக இருந்த எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருடன் திரைத்துறையில் பயணித்துள்ளார்.
எந்த மொழியானாலும் அவரே டப்பிங் பேசுவார். காவியத்தலைவி, ரங்கராட்டினம் ஆகிய 2 படங்களை தயாரித்தார். தெலுங்கு திரைப்பட விருதுகள் கமிட்டி தலைவராகப் பணிபுரிந்தார். சமையல், தோட்டக் கலையில் வல்லவர்.சென்னையில் 1965-ல் சத்ய சாய்பாபாவை சந்தித்த பிறகு, அவரை தன்குருவாக ஏற்றுக்கொண்டார். அவரால்தன் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடந்துள்ளதாக பலமுறை குறிப்பிட்டுள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருது, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 2022-க்கான பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது. திரையுலகில் தைரியமான யதார்த்த நடிகை என பெயரெடுத்தவர் திரையுலகில் சுமார் 70 ஆண்டுகாலம் நடித்த ஜானகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவராக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.