

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஷால், தற்போது ‘மகுடம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க, நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், பின்னர் படத்தின் இயக்கப் பொறுப்பை நடிகர் விஷால் ஏற்று, இயக்கியும் நடித்தும் முடித்துள்ளார். தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் விஷால், தமிழக முதல்-அமைச்சர் விஜய் குறித்து மனம் திறந்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "கல்லூரி காலத்தில் பார்த்த அதே விஜய்தான் இப்போதும் இருக்கிறார். பதவி மட்டும் மாறியுள்ளது. அவரை நான் இன்னும் 'டார்லிங்' என்றே அழைக்கிறேன். அவரை சந்திக்கும்போது பூங்கொத்து கொடுப்பதற்கு பதிலாக, அவரது பெயரில் மூன்று குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தேன். அதைக் கேட்டு அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்" என்றார்.
மேலும், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் விஜய்க்கு ஒரு கதையை சொல்ல நேரம் கேட்டிருந்தேன். தற்போது அந்தக் கதையை நானே திரைப்படமாக பயன்படுத்தப் போகிறேன் என்று சொன்னதும் அவர் சிரித்தார்" என்றும் விஷால் பகிர்ந்தார். விஷாலின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.