ஆஸ்கார் விருது வென்ற பாலஸ்தீன இயக்குநரை கைது செய்த இஸ்ரேல் ராணுவம்!

இஸ்ரேலிய வீரர்கள் ஹம்தானை தாக்கி கைது செய்து கொண்டு சென்றனர் என்று ‘நோ அதர் லேண்ட்’ படத்தின் மற்றொரு இயக்குனர் யுவல் ஆபிரகாம் தனது தளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆஸ்கார் விருது வென்ற பாலஸ்தீன இயக்குநரை கைது செய்த இஸ்ரேல் ராணுவம்!
Published on

ஆஸ்கார் விருது பெற்ற 'நோ அதர் லேண்ட்' என்ற பாலஸ்தீன ஆவணப்படத்தின் இணை இயக்குநர் ஹம்தான் பல்லால். இவர் தற்போது பாலஸ்தீன மேற்கு கரையில் சட்டவிரோதமாக ஊடுருவி ஆக்கிரமிப்பு செய்த இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்டு அந்நாட்டு ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார்.

'நோ அதர் லேண்ட்' படத்தின் மற்றொரு இயக்குனர் யுவல் ஆபிரகாம் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். "எங்கள் 'நோ அதர் லேண்ட்' படத்தின் இணை இயக்குநரான ஹம்தான் பல்லால் இஸ்ரேலிய குடியேறிகள் குழுவால் தாக்கப்பட்டார். இதன் காரணமாக அவருக்கு தலை மற்றும் வயிற்றில் காயம் ஏற்பட்டு இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது" என்று தனது சமூகவலைதள பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் ஹம்தானை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸை இஸ்ரேலிய வீரர்கள் தாக்கி, ஹம்தானை கைது செய்து கொண்டு சென்றனர் என்று அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய குடியேறிகள் தாக்குதலின்போது ஹம்தான் பல்லால் உடன் இருந்த யுவல் ஆபிரகாமும் காயமடைந்துள்ளார்.

இந்த ஆண்டு சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கார் விருதை 'நோ அதர் லேண்ட்' படம், இஸ்ரேலிய இராணுவத்தால் தங்கள் கிராமங்கள் இடிக்கப்படுவதைத் தடுக்கும் மேற்கு கரை மசாபர் யட்டா குடிமக்களின் போராட்டத்தை சித்தரிக்கிறது. இந்த படத்தை மசாபர் யட்டாவைச் சேர்ந்த பால்ஸ்தீனிய இயக்குநர்கள் ஹம்தான் பல்லால் மற்றும் பாஸல் அட்ரா மற்றும் இஸ்ரேலிய இயக்குநர்கள் யுவல் ஆபிரகாம், ரேச்சல் ஸ்ரோர் ஆகிய 4 பேரும் சேர்ந்து இயக்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது இயக்குநர் ஹம்தாம் பல்லா கைது செய்யப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கண்டனங்களை குவித்து வருகிறது.

பலால் கைது செய்யப்பட்டபோது அங்கிருந்த மற்றொரு இயக்குநரான பசேல் அட்ரா கூறுகையில், "20க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கிராமத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர் முகமூடி அணிந்தும், துப்பாக்கிகளை ஏந்தியும், இஸ்ரேல் ராணுவ உடையிலும் இருந்தனர்.இங்கு வந்த ராணுவ வீரர்கள் துப்பாக்கி முனையில் பாலஸ்தீன மக்களை மிரட்டினர். அவர்களுடன் இருந்த மக்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். நாங்கள் ஆஸ்கர் விருது வென்று திரும்பிய நாள் முதல் தினமும் இங்கு எங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது. படம் எடுத்ததற்காக எங்களை அவர்கள் பழிவாங்குவதைப் போல இருக்கிறது. இது எங்களுக்கு தண்டனையைப் போல உணர்கிறோம்" என்றார்.

இஸ்ரேல் ராணுவம் இந்தக் கைது சம்பவம் குறித்துப் பேசியபோது, "ராணுவ வீரர்களின் மீது கற்களை வீசிய பாலஸ்தீனர்களை நாங்கள் கைது செய்தோம். மேலும், பாலஸ்தீன் - இஸ்ரேல் மக்களுக்கு இடையிலான மோதலில் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்ட 3 பாலஸ்தீனியர்கள் மற்றும் ஒரு இஸ்ரேலியரையும் கைது செய்தோம். இஸ்ரேல் போலீஸ் அவர்களிடம் விசாரணை நடத்தவுள்ளனர்" என்று அவர்கள் தெரிவித்தனர்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com