

சென்னை
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜபுத்ர ராணி பத்மாவதியின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம், `பத்மாவத்'. இந்த திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், தங்கள் மாநிலங்களில் அந்தப் படத்தை வெளியிட முடியாது' என்று மத்தியப்பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் அரசுகள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தன.
இதனிடையே, 'பத்மாவத்' திரைப்படத்துக்குத் தடை விதிக்க முடியாது' என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. பல்வேறு தடைகளை உடைத்து `பத்மாவத்' திரைப்படம் இன்று இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளிவருகிறது. இதனை எதிர்த்து மத்தியப்பிரதேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது.
பத்மாவத் படத்திற்கு எதிரான போராட்டத்தின் போது அரியானா மாநிலம், குர்கிராமில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது
சென்னையில் நள்ளிரவில் வெளியானது, 'பத்மாவத்' திரைப்படம்.
பத்மாவத் திரைப்படத்துக்கு திரைத்துறையினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசுக்கு நடிகர் அரவிந்த்சாமி, கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகர் அரவிந்த்சாமி டுவிட்டரில், சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுவிட்டால் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்கள். ஒன்று நாட்டு மக்களுக்கும் அவர்கள் உடைமைகளுக்கும் பாதுகாப்பு தாருங்கள். உங்களால் முடியவில்லை என்றால், அதற்கு எந்த சாக்குபோக்கும் சொல்லாதீர்கள். உங்கள் நிர்வாக சீர்கேட்டைத் தவிர இங்கே குறை சொல்வதற்கு வேறொன்றும் இல்லை என்று பதிவிட்டுள்ளார்.