'விடாமுயற்சி' படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி

‘விடாமுயற்சி’ படம் நாளை வெளியாக உள்ள நிலையில் தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை,
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
விடாமுயற்சி திரைப்படம் பிரேக்டவுன் என்கிற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. இப்படத்திற்கு அஜித் ரூ. 105 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நாளை 1,000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளது. டிக்கெட் முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்னரே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாகியுள்ளது.
இந்த நிலையில், 'விடாமுயற்சி' படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதாவது, தயாரிப்பு நிறுவனம் வைத்த கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (06-02-2025) ஒருநாள் மட்டும் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி கடைசி காட்சி இரவு 2 மணி வரை (ஒரு நாளைக்கு 5 காட்சிகள் மட்டும்) திரையிடலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.