

கொச்சி,
கேரளா ஸ்டோரி-2 என்ற மலையாள திரைப்படத்துக்கு வழங்கிய தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய கோரி, கண்ணூர் மாவட்டம் சிற்றாற்றில் பரம்பு பகுதியை சேர்ந்த ஸ்ரீதேவ் நம்பூ திரி என்பவர் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், இந்த திரைப்படத்தில் கேரளாவை பற்றி தவறான கண்ணோட்டங்களை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன் மூலம் கேரள மாநிலத்தை பயங்கரவாத இடமாக சித்தரிக்க முயற்சி நடந்துள்ளது. திரைப்பட முன்னோட்ட காட்சியில், கேரளாவில் ஒரு இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி மாட்டிறைச்சி உண்ண செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்று உள்ளது.
எனவே, கேரளா ஸ்டோரி-2 படத்துக்கு வழங்கிய தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. இந்த மனுவை பரிசீலித்த ஐகோர்ட்டு, மத்திய தணிக்கை குழுவுக்கும், திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. இந்த மனு மீதான விசாரணை வருகிற 24-ந் தேதி மீண்டும் நடைபெறும் என்று ஐகோர்ட்டு தெரிவித்தது.
கேரளா ஸ்டோரி-2 திரைப்படம் மூலம், மத ஒற்றுமை நிலவும் கேரள மாநிலத்தை அவமதிக்க முயற்சி நடக்கிறது என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.