'மாமன்னன்' படத்திற்கு இடைக்கால தடை கோரி ஐகோர்ட்டில் மனு

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'மாமன்னன்' திரைப்படத்துக்கு இடைக்கால தடை கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
'மாமன்னன்' படத்திற்கு இடைக்கால தடை கோரி ஐகோர்ட்டில் மனு
Published on

சென்னை,

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'மாமன்னன்' திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஓ.எஸ்.டி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், ஆனந்தி, பாயல் ராஜ்புத், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் 'ஏஞ்சல்' என்ற திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.

'ஏஞ்சல்' படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில் மீதமுள்ள 20 சதவீத படப்பிடிப்புக்கு ஒப்பந்தப்படி உதயநிதி ஸ்டாலின் கால்ஷீட் தராமல் புறக்கணிக்கிறார். மேலும் 'மாமன்னன்' திரைப்படம்தான் தனது கடைசி படம் என்று கூறியுள்ளார். 'ஏஞ்சல்' படத்துக்கு இதுவரை 13 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 'ஏஞ்சல்' படத்தை முடிக்காமல் 'மாமன்னன்' படத்தை வெளியிட்டால் தமக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும்.

எனவே, 'ஏஞ்சல்' படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை உதயநிதி ஸ்டாலின் நிறைவு செய்து தர வேண்டும். 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும். அதுவரை 'மாமன்னன்' படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com