நடிகர் ஷாருக்கானின் பங்களா வீடு விரிவாக்க அனுமதியை எதிர்த்த மனு தள்ளுபடி

இதனால் ஷாருக்கானின் 'மன்னத்' பங்களாவை விரிவாக்கும் பணிகளுக்கு இருந்த சட்டத் தடைகள் நீங்கியுள்ளன.

நடிகர் ஷாருக்கானின் பங்களா வீடு விரிவாக்க அனுமதியை எதிர்த்த மனு தள்ளுபடி
Published on

மும்பை,

பாலிவுட் நடிகர் ஷாருக்கான், மும்பை பாந்திராவில் உள்ள தனது பிரபலமான 'மன்னத்' பங்களா வீட்டில் கூடுதலாக இரண்டு தளங்கள் கட்ட திட்டமிட்டுள்ளார். இதற்காக மகாராஷ்டிரா கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கியிருந்தது. மேலும், தேசிய பசுமை தீர்ப்பாயமும் இந்த விரிவாக்கப் பணிகளுக்கு ஒப்புதல் அளித்திருந்தது.

சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு

இந்த அனுமதியை எதிர்த்து சந்தோஷ் தவுண்ட்கர் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மல்யா பக்சி, வி.மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷோயிப் ஆலம், "பிரபல நடிகர் தொடர்பான வழக்கு என்பதற்காக இதை வேறு விதமாக அணுகக்கூடாது" என்று வாதிட்டார்.

விதிமுறை மீறல் இல்லை - சுப்ரீம் கோர்ட்டு

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மும்பை பாந்திரா கடற்கரையை ஒட்டியுள்ள 'மன்னத்' பங்களா வீட்டை புதுப்பித்து கூடுதலாக இரண்டு தளங்கள் கட்டுவதற்கு மகாராஷ்டிரா கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் வழங்கிய அனுமதியில் எந்த விதிமுறை மீறலும் இல்லை என்று தெரிவித்தனர்.

மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

இதையடுத்து, கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் வழங்கிய அனுமதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதன் மூலம், ஷாருக்கானின் 'மன்னத்' பங்களாவை விரிவாக்கும் பணிகளுக்கு இருந்த சட்டத் தடைகள் நீங்கியுள்ளன. இந்த தீர்ப்பு பாலிவுட் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com