சவுகார் ஜானகி மறைவுக்கு பின்னணி பாடகி சுசீலா இரங்கல்

சவுகார் ஜானகி மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சவுகார் ஜானகி மறைவுக்கு பின்னணி பாடகி சுசீலா இரங்கல்
Published on

நடிகை சவுகார் ஜானகி மறைவுக்கு பின்னணி பாடகி பி. சுசீலா இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வரும் சவுகார் ஜானகியின் வயது 94. இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை பலனளிக்காமல் நடிகை சவுகார் ஜானகி நேற்று காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சவுகார் ஜானகி உடலுக்கு காலை முதலே சினிமா பிரபலங்களும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். எம்எஸ் பாஸ்கர், நிழல்கள் ரவி, ஷாலினி அஜித், நாசர் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகிகள், சிவகுமார், குட்டிபத்மினி, சத்யராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக அரசு சார்பில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர்கள் ராஜ்மோகன் மற்றும் வெங்கடரமணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், மா சுப்ரமணியம் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

சவுகார் ஜானகியின் புகழ் பெற்ற படங்களில் உள்ள பிரபலமான பல பாடல்களை பாடகி பி சுசீலா பாடியுள்ளார். சவுகார் ஜானகியின் மறைவுக்கு பி சுசீலா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் “என் இனிய தோழி சௌகார் ஜானகியின் மறைவை கேள்விபட்டு அதிர்ச்சி அடைந்தேன். எங்கள் உறவு பல வருடங்களை கடந்த உறவு. சினிமாவைத் தாண்டி எங்கள் உறவு நீடித்தது. முக்கியமாக ஸ்ரீ சத்யா சாய் பாபாவின் பக்த்தைகளாக திகழ்ந்த போது பாபா தொடர்புள்ள விழாக்களில் இணைந்து பணியாற்றியது ஒரு பாக்கியம். என் மனம், இந்த அதிர்ச்சி தரும் நிகழ்வை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இந்த பதிவின் வாயிலாக அவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு அவரின் ஆன்மா இறைவனடியைச் சேருமாறு இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இன்றுமாலை 4 மணிக்கு மேல் சவுகார் ஜானகி உடல் அவரது குடும்ப வழக்கப்படி சடங்குகள் செய்யப்பட்ட பின் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் வைத்து தகனம் செய்யப்படுகிறது.

இன்று மாலை 4:30 மணியளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com