

சென்னை:
தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் ‘பொன்னியின் செல்வன் - 1’ திரைப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது.
விருது பெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.ஆர்.ரகுமான், “தென்னிந்தியாவின் மிக முக்கியமான கதை ‘பொன்னியின் செல்வன்’. கொரோனா காலத்தில் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு இயக்குநர் மணிரத்னம் இந்தப் படத்தை உருவாக்கினார்,” என்று தெரிவித்தார்.
மேலும், படத்தில் பாடிய பாடகர்கள், நடித்த நடிகர்கள் மற்றும் உழைத்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். “எல்லாப் புகழும் இறைவனுக்கே. இந்த அங்கீகாரத்திற்கு தமிழக அரசுக்கும் எனது நன்றி,” என்றும் அவர் கூறினார்.
கல்கியின் வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகளவில் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.