போஸ்டர் சர்ச்சை - விக்ரம் படம் மீது போலீசில் புகார்

வீர தீர சூரன் படத்துக்கு எதிராக சமூக ஆர்வலர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்
போஸ்டர் சர்ச்சை - விக்ரம் படம் மீது போலீசில் புகார்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் புகழ் பெற்றவர் விக்ரம். இவர் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதைத்தொடர்ந்து விக்ரமின் 62-வது படத்தை எஸ்.யு. அருண் குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு இவர் முன்னதாக பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில், இப்படத்திற்கு வீர தீர சூரன் (பாகம்-2) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரில் விக்ரம் இரண்டு கைகளிலும் அரிவாள் வைத்து போஸ் கொடுத்துள்ள காட்சி இடம்பெற்று உள்ளது. இந்த போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், படத்துக்கு எதிராக சமூக ஆர்வலர் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். புகார் மனுவில், "இணைய தளத்தில் இளைஞர்கள் கத்தியுடனோ அல்லது கத்தியை வைத்து கேக் வெட்டி புகைப்படம் வெளியிட்டாலோ போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் வீர தீர சூரன் படத்தில் விக்ரம் இரண்டு கையில் கத்தி வைத்துள்ள போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகி உள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்கும். இளைஞர்களிடம் வன்மத்தையும் தூண்டும். எனவே படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' இவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com