சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கு கேட்டுள்ளது - காப்பான் இசை வெளியீடு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

நடிகர் சூர்யா பேசியதே பிரதமர் மோடிக்கு கேட்டுள்ளதாக, காப்பான் இசை வெளியீடு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கு கேட்டுள்ளது - காப்பான் இசை வெளியீடு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
Published on

சென்னை,

இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் காப்பான் பட இசை வெளியிட்டு விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது.

இதில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், கவிஞர் வைரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய வைரமுத்து, இந்த விழாவில் பங்கேற்றுள்ள ரஜினி பொருளை மட்டும் பகிர்ந்து கொடுப்பவர் அல்ல, தன் புகழையும் பெருந்தன்மையையும் பகிர்ந்து கொடுப்பவர். சினிமாத் துறையில் உள்ளவர்கள் தங்கள் பணிக்கு சம்பளம் வாங்குகிறோம். அதோடு சமூகத்திற்கும் அவர்களுக்குமான உறவு முடிந்துவிட்டதாக நினைக்காது, எனக்கு ஒரு சமூக அக்கறை உண்டு என்று செயல்பட்ட சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துகொள்கிறேன் என்று கூறினார்.

பாடலாசிரியர் கபிலன் பேசுகையில், புதிய கல்விக்கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா பேசியதை, நடிகர் ரஜினிகாந்த் பேசியிருந்தால், அதை பிரதமர் மோடி கேட்டிருப்பார் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், தமிழாற்றுப்படை புத்தக்கதை படித்தவுடன் வைரமுத்து மீது இன்னும் மதிப்பு அதிகமானது. தமிழாற்றுப்படையில் தமிழ் பற்றிய தகவல்கள் அனைத்தும் உள்ளது. நானும் கே.வி.ஆனந்த்துடன் படம் செய்திருக்கவேண்டியது. ஆனால் அதை நான் தான் தவறவிட்டுவிட்டேன். மோகன்லால் இயற்கையான நடிகர். கமலின் இந்தியன் 2 நிச்சயம் வெற்றி பெறும். பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்தினம் இயக்க உள்ளார். இப்படம் எப்படி வரும் என ஆவலாக காத்திருக்கிறேன். தர்பார் படம் நல்லபடியாக வந்துகொண்டு இருக்கிறது. புதிய கல்விக் கொள்கை குறித்து ரஜினி பேசினால் மோடிக்கு கேட்டிருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் சூர்யா பேசியதே மோடிக்கு கேட்டுள்ளது. சூர்யாவின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். சூர்யாவின் இன்னொரு முகம் சில நாட்களுக்கு முன் தெரிந்தது என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com