

நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப் படத்தை நடிகை பிரியங்கா சோப்ரா வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை ஸ்ரீதேவி 1963-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் நாள் பிறந்தார். சிறுவயது முதலே நடிப்பின்மீது ஆர்வம் கொண்ட ஸ்ரீதேவி, 4 வயதில் ‘கந்தன் கருணை’ படத்தில் குழந்தை பாத்திரத்தில் நடித்தார். படிப்படியாக முன்னேறி கதாநாயகி ஆனார். இவர் திரையுலகில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி இருக்கிறார். தனது 54ஆவது வயதில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உயிரிழந்தார்.
பாலிவுட் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்ட ஸ்ரீதேவி, 1976-ல் கே.பாலசந்தரின் ‘மூன்று முடிச்சு’ படத்திற்காக முதல்முறையாக தேசிய விருது பெற்றார். நடிகை ஸ்ரீதேவிக்கு 2017-ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அப்போது அவர் நடித்த ‘மாம்’ திரைப்படத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. ஸ்ரீ தேவி தமிழில் கடைசியாக நடித்த படம் ‘புலி’.
சிறந்த நடிப்புக்காக 4 முறை பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார். 2013-இல் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி, கடந்த பிப்ரவரி 24, 2018 அன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க துபாய் சென்றிருந்தபோது குளியல் தொட்டியில் மூழ்கி காலமானார்.
இந்த நிலையில், தீரஜ் யு. குமார் எழுதிய ‘‘எம்பிரஸ்: தி டெபனிட்டிவ் பயோகிராபி ஆப் ஸ்ரீதேவி’ என்ற புத்தகத்தை வெஸ்ட்லேண்ட் புக்ஸ் பதிப்பித்துள்ளது. இதில் ஸ்ரீதேவியின் குழந்தைப் பருவம் முதல் இந்தியாவின் முதல் பான் இந்திய நடிகையாக மாறிய வாழ்க்கைப் பயணம் என அவரது ஐம்பதாண்டுகளை குறித்து எழுதப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் புத்தகத்தின் அட்டைப் படத்தை வெளியிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா, “ஒரேயொருவர் மட்டுமே. உங்களை மிகவும் மிஸ் செய்கிறோம். ‘எம்பிரஸ்: தி டெபனிட்டிவ் பயோகிராபி ஆப் ஸ்ரீதேவி’ புக்ஸ் விரைவில் வருகிறது” என கூறியுள்ளார்.
இந்தப் புத்தகத்தில் ஏழு முக்கியமான திரைக் கலைஞர்கள் இடம்பெற்றுள்ளார்கள். குறிப்பாக அமிதாப் பச்சன், ஜாவேத் அக்தரின் தனிச்சிறப்பான தகவல்கள் அடங்கியுள்ளன. 150க்கும் அதிகமான அறியவகை புகைப்படங்கள் இருக்கின்றன.